வெள்ளி, 2 ஜூலை, 2010

சவரத் தொழில் செய்யும் இளம்பெண் - 2.7.10 தினத்தந்தி செய்தி


20 வயதான ஒரு இளம்பெண் வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சவரத் தொழிலில் ஈடுபட்டு தனது தாயை காப்பாற்றி வருகிறார். அவர் பெயர் தேவிபாலா. தர்மபுரி மாவட்டம் பாலகோடு அருகில் உள்ள அமானிமல்லபுரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கிருஷ்ணன் அவரது சகோதரரின் முடி திருத்தும் கடையில் வேலை பார்த்து வந்த போது தேவி பாலா பள்ளிப் படிப்பு படித்து வந்தார். சில நேரங்களில் அந்த முடி திருத்தும் கடைக்கு சென்று தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். அப்போது சவரத் தொழிலையும் கற்றுக் கொண்டார். இந்நிலையில் திடீரென அவரது தந்தை கிருஷ்ணன் இறந்து விட்டார். தேவிபாலாவின் உடன் பிறந்த இரு சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டு தனி குடித்தனம் சென்று விட்டனர். இந்த நிலையில் தேவிபாலா தனது தாய் கமலாவை காப்பாற்ற படிப்பை நிறுத்திவிட்டு தனது தந்தையின் தொழிலான சவரத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். கடந்த 8 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வரும் தேவிபாலா கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது தாயை கவனித்து வருகிறார். 12 வயது முதலே வயிற்று பிழைப்புக்காக கையில் கத்தி, கத்தரிக்கோலுடன் வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் முகச் சவரம் மற்றும் முடி திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து தேவிபாலா கூறுகையில், " வறுமையின் காரணமாக எனது தந்தையின் தொழிலான சவரத்தொழிலை செய்து வருகிறேன். விரும்பி இத் தொழிலை செய்யவில்லை. 8 ஆண்டுகளாக செய்து வருகிறேன். படிக்க வழி இல்லை. பிழைக்க வருமானம் இல்லை. இந்த நிலையில் தாயை காப்பாற்ற தந்தையின் தொழிலை செய்து வருகிறேன். இந்த தொழிலை முழுமையாக ஏற்று செய்யவில்லை. வேறு வழியின்று செய்கிறேன்" என்று கூறினார்.